அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலானது டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தலுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில்,
அதிமுகவின் சட்டதிட்ட விதி-30 பிரிவு 2-ன்படி கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 7ஆம் தேதியும் வாக்கெண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெறுதல் டிசம்பர் 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையர்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 13 முதல் 23 வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.