தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கழிப்பறையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சடலம் சனிக்கிழமை கிடந்தது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கழிப்பறை உள்ளது. இதில் ஒரு அறையில் மேற்கத்திய வடிவ கழிப்பறையில் சனிக்கிழமை முற்பகல் தண்ணீர் வரவில்லை. சுத்தம் செய்ய சென்ற தூய்மைப் பணியாளர்கள் தண்ணீர் வராததை அறிந்து கழிவறையுடன் இணைப்பில் உள்ள தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தனர். அதில் பெண் சிசு சடலம் கிடந்தது. தொப்புள் கொடியுடன் இருந்த இக்குழந்தை பிறந்து சில மணிநேரங்களே ஆகியிருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. தீபாவளி காரணமா? அக்டோபரில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிய இந்தியர்கள்
தகவலறிந்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில், முதியவர் ஒருவரும், பெண்ணும் சிசுவை தூக்கிச் செல்வது தெரிய வருகிறது. இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவர் குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு உள்ள நிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இக்குழந்தை எப்படி கொண்டு வரப்பட்டது என்ற சந்தேகம் காவல்துறையினர் மத்தியில் நிலவுகிறது. இக்குழந்தை எப்படி இறந்தது? என்பது குறித்தும், தொடர்புடைய நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.