துறையூர்: துறையூர் அருகே பச்சமலையில் 8 கிராமங்களுக்கு இரவில் மருத்துவப் பணியாளர்கள் நேரில் சென்று அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உப்பிலியபுரம் வட்டாரம் பச்சமலையில் உள்ள கிராம மக்கள் பகலில் வயல் வேலைக்கு சென்று விடுவதாலும், தன்னிச்சையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டததாலும் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது மருத்துவ பணியாளர்களுக்கு சவாலாக இருந்தது.
இந்த நிலையில் பழங்குடியினத்தவர் வீடுகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் நேரில் சென்று தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து அங்கு மாலை 6 இரவு 9 மணி வரை இரவு நேர தடுப்பூசி முகாமை மருத்துவ பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று நடத்தினர்.
டாப்செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய(பொறுப்பு) மருத்துவர் ப.சம்பத்குமார், உதவி மருத்துவர்கள் ச. தீபக், பெ.ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருந்தாளுநர் செந்தில்ஜோதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் நேசம் சமூக கிராம மேம்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 10 மருத்துவக் குழுவினர் வியாழக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை டாப்செங்காட்டுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 8 கிராமங்களில் 400 வீடுகளுக்கு நேரில் சென்று 205 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தினர்.
மேலும் அங்கு இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.