தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி, பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையிலும்; மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தினோம்.
ஆனால், தமிழக மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயன் அளிக்கக்கூடிய குறைந்தபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முதல் அடியைக்கூட இந்த அரசு இதுவரை எடுத்து வைக்கவில்லை.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், குறைந்தது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என்றும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.
இதனால், தமிழகத்தில் சரக்கு போக்குவரத்துக் கட்டணம் குறைந்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையும் என்று கூறினார்.
ஆனால், நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தனி மனித கருத்தை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று பொருப்பற்று டி.ஆர். பாலு பதில் அளித்துள்ளார்.
திமுக-வின் பொருளாளரும், மூத்த தலைவருமான டி.ஆர். பாலுவே, பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையில், தேர்தல் சமயத்தில் திமுக அறிவித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.