Enable Javscript for better performance
அதிகரிக்கும் கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அதிகரிக்கும் கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

    By DIN  |   Published On : 31st December 2021 08:07 PM  |   Last Updated : 31st December 2021 08:12 PM  |  அ+அ அ-  |  

    stalin_MK_new

    மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

    தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.882 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15.12.2021-ன்படி, 31.12.2021 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் 31.12.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 27.12.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.1.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    இதனைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.1.2022 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
    பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக
    மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அன்புடன்
    கேட்டுக் கொள்கிறேன்.
    1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
    2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
    3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
    4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

    ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
    1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.
    2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

    3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
    4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park / Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
    5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
    6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
    7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
    8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    10) பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.
    11) மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
    12) திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் (Multiplex/Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
    13) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
    14) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
    15) அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
    பொது:-
     தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒமைக்ரான் வைரஸ் அதிகம் தாக்க வாய்ப்புள்ளதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுதியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்
    உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
     கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).

     கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
     வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.
     அனைத்து நிறுவனங்களும் குளிர் சாதன வசதியை தவிர்த்து வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
     நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
     கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை(Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
    வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
     நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
     நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்று பரவலை வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
     கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
    தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தற்போது உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
    எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 
    மேலும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறும், மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp