மணப்பாறையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், ஜனவரி 26-ல் நடைபெற்ற விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 25 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், வேளாண்மை சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஜனவரி 26-ல் நடைபெற்ற விவசாயிகள் மீதான தாக்குதல் கண்டித்தும் சாலை மறியல் போரட்டம் நடைபெற்றது.
தாலுகா செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு முன்னதாக கோவில்பட்டி சாலை காமராஜர் சிலை அருகிலிருந்து பேரணியாக புறப்பட்ட விவசாய சங்கத்தினர், மத்திய மாநில அரசுகளை கண்டுத்து கோஷங்களிட்ட நிலையில் கச்சேரி சாலை, புதுத்தெரு வழியாக பேருந்து நிலையம் அடைந்தனர்.
அங்கு பேருந்து நிலைய முகப்பில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட 25 நபர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் வி.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என்.ராஜகோபால், பி.தியாகராஜன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.