மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை: உரிய நடவடிக்கை எடுப்பதாக துரைமுருகன் உறுதி

மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருக்கும் அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை: உரிய நடவடிக்கை எடுப்பதாக துரைமுருகன் உறுதி
மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை: உரிய நடவடிக்கை எடுப்பதாக துரைமுருகன் உறுதி

சென்னை: மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருக்கும் அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 02.07.2021 அன்று சில நாளேடுகளில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.

2017-இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலநீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி கொள்ளளவுள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019-இல் இந்த அணை அநேகமாக கட்டிமுடிந்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவின் இச்செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 18.5.2018-இல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

29.6.2021 அன்று தமிழ்நாடு அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து நடுவண் அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com