நோயாளி இருந்தால் என்ன? செத்தால் என்ன? மருத்துவ அதிகாரியின் அலட்சியப் பேச்சு
நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்று சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை செவிலியரிடம் பேசும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இருந்தால் என்ன? செத்தால் நமக்கென்ன? மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மட்டுமே நோயாளிகளை அனுப்ப வேண்டும் என சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரிடம் மருத்துவமனை உயர் அதிகாரி போனில் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி ஒன்றியம் வடக்கு கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் கார்த்திக்( 24). இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் நெஞ்சு வலி ஏற்பட்டதால் செவிலியர் நோயாளி கார்த்திக்கை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து நோயாளியின் தரப்பைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிலைய உயர் அதிகாரி டாக்டர் மீனாவிடம் புகார் செய்தனர். அதன் பின்னர் டாக்டர் மீனா செவிலியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர் பேசிய விபரம், கார்த்திக்கை ஏன் தனியார் மருத்துவமனைக்கு போகுமாறு பரிந்துரை செய்தீர்கள். நாம் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மட்டுமே மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.
நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் நமக்கென்ன? நோயாளியின் நல்லது கெட்டது பற்றியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது. இவ்வாறு அந்த செல்லிடப்பேசி உரையாடல் உள்ளது.
இந்த உரையாடலின்போது மருத்துவ அதிகாரி, செவிலியரிடம் நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் நமக்கென்ன? என பேசும் பேச்சு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.