
ஆட்சியர் வளாகத்தின் முன்பு தரமற்ற அரிசியை தரையில் கொட்டி தர்னாவில் ஈடுபட்ட சரவணன்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்குள்பட்ட கிராம நியாய விலைக் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரிசியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் கொட்டி தர்னாவில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் வேலம் கிராமத்திலுள்ள ரேஷன் கடை 1-யில் கலப்பட அரிசி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை உணவுக்காக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தைக் கண்டு ஆவேசமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளிடம் நேரில் கலப்பட அரிசியை காண்பித்து இதனை எவ்வாறு சமையல் செய்து உண்பது என்று நியாயம் கேட்டார்.
அதற்கு அதிகாரிகள் ரேஷன் கடையில் இவ்வாறுதான் அரிசி வழங்கப்படும். வேண்டுமென்றால் கடையில் வாங்கி உண்ணுங்கள் என்று மெத்தனமாக பதில் தெரிவித்தனர்.
பணம் இருப்பவர்கள் கடையில் வாங்கி உண்பார்கள், எங்களைப்போன்ற ஏழைகள் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற அரிசியை தான் நம்பி உள்ளோம். தயவுகூர்ந்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் முறையாக தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரிசியை தரையில் கொட்டி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.