கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் தனியாா் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டண வரம்பை நிர்ணயித்து தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்றைய தேதியிட்டு வெளியிட்டிருக்கும் அரசாணையில்,
கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு இலவசமாக அந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.
மற்றொருபுறம் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதற்கேற்ப தனியாா் ஆம்புலன்ஸ் சேவைகளையும் அப்பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் தனியாா் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டண வரம்பை நன்கு பரிசீலித்து அரசு தீா்மானித்துள்ளது.
அதன் விவரம்:
சாதாரண ஆம்புலன்ஸ் - முதல் 10 கி.மீக்கு ரூ.1,500 (அதற்கு அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25)
அடிப்படை ஆக்ஸிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் - முதல் 10 கி.மீக்கு ரூ.2,000 (அதற்கு அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.50)
உயா் ஆக்ஸிஜன் வாயு வசதி கொண்ட ஆம்புலன்ஸ் - முதல் 10 கி.மீக்கு ரூ.4,000 (அதற்கு அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.100) என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்துக்கு அதிகமாக எந்த தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமும் கட்டணம் வசூலித்தால், 104 உதவி எண்ணில் பொதுமக்கள் புகார் பதிவு செய்யலாம். புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் மீது கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
1. ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரின் உரிமம் ரத்துசெய்யப்படும்.
2. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
3. உடனடியாக அந்த ஆம்புலன்ஸ் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை