கமுதி அருகே ரேஷன் கடை ஊழியரைத் தாக்கிய திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமுதி அருகே ஆரைகுடியைச் சேர்ந்தவர் குமரையா கண்ணையா(52). இவர் கருங்குளம், பாக்குவெட்டி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கருங்குளம் ரேஷன் கடையில் திங்கட்கிழமை பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் மற்றும் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ. 2000 வழங்குவது தொடர்பாக கடையை சுத்தம் செய்வதற்காக கருங்குளம் சென்றுள்ளார்.
அப்போது கருங்குளம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கமுதி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சித்ரா தேவியின் கணவரும், ராமநாதபுரம் மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளருமான அய்யனார் ரேஷன் கடை ஊழியரான கண்ணையாவை அழைத்து, என்னைக் கேட்காமல் பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் 2000 ரூபாய் எதற்காக கொடுத்தாய்? எனக் கேட்டுத் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த கண்ணையா கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கண்ணையா பேரையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திமுக நிர்வாகி அய்யனாரை தேடி வருகின்றனர்.