கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகப் பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடும் பாகுபலி காட்டுயானை மீது ரேடியோ காலர் பொருத்த 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் சிறுத்தை, காட்டுயானை, குரங்கு, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக போதிய மழை பொழியாததால் வனத்தில் வனவிலங்குகளுக்கு போதிய அளவில் உணவு, குடிநீர் கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் வனத்தை விட்டு வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதியில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இதில் தற்போது மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் ஓடந்துறை, சமயபுரம், வெள்ளிப்பாளையம், ஊமப்பாளையம், வேடர்காலணி உள்ளிட்ட பகுதிகளில் பாகுபலி என்ற ஒற்றை காட்டுயானை அடிக்கடி குடியிருப்பு, விளை நிலங்களில் நடமாடி வருகிறது.
இதுவரை மனிதர்களைத் தாக்கவில்லை என்றாலும் இந்த பாகுபலி யானை ஊமப்பாளையம் வழியாக இரவு நேரங்களில் பவானி ஆற்றை கடந்து வெள்ளிப்பாளையம் பகுதியில் நடமாடி வருவது அச்சத்தைஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே வனத்துறை அதிகாரிகள் பாகுபலி யானை மீது ரேடியோ காலர் பொருத்தி யானையை கண்காணிக்க முடிவு செய்தனர். இதனிடையே பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு பாகுபலி மீது ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது. இதனால் செவ்வாய்கிழமை இரவு கலீம் (56) என்ற கும்கி யானை மேட்டுப்பாளையம் வந்தடைந்தது. இதையடுத்து கூடுதலாக மேலும் 2 கும்கி யானைகள் புதன்கிழமை மேட்டுபாளையத்திற்கு வர உள்ளன. இதற்கான பணிகளை மேட்டுப்பாளையம் வனச்சரகர் பழனிராஜா தலைமையில் நடக்க உள்ளது.