சிறு துறைமுகங்களுக்கான வரைவு மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, இராசயாணம் மற்றும் உரங்கள் துறைக்கான மத்திய இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று கடல் சார் மேம்பாட்டுக் கூட்டத்தை  இணையதள மூலமாக நடத்தினார்.
மத்திய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு
மத்திய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, இராசயாணம் மற்றும் உரங்கள் துறைக்கான மத்திய இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று கடல் சார் மேம்பாட்டுக் கூட்டத்தை  இணையதள மூலமாக நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் துறைமுகங்களுக்கான வரைவு மசோதா தொடர்பான விவாதங்களை மேற்கொண்டார். தமிழக அரசின் சார்பில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று இணையதளம் மூலமாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, கடலோரத்தில் வாழும் மக்கள் சமூக மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் நீல பொருளாதாரம் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. கடலூர் மற்றும் கன்னியாகுமரி துறைமுகங்களில் சாகர்மாலா / உள்நாட்டு தோணித்துறை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மேம்பாட்டு பணிகளையும், நிதி ஆதாரத்தையும் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த வாரம் தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து சமர்ப்பித்த கருத்துருக்களின் அடிப்படையில் பின்வரும் இரண்டு முக்கிய பொருள்கள் சம்மந்தமாக மத்திய இணையமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

1. தமிழக மக்களின் கனவுத் திட்டம் சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம். இந்த திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்து செயல்பட கேட்டுக் கொண்டார்.
2. தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி. துறைமுகத்தை சரக்கு மாற்று முனையமாக மாற்றுவதற்கு விரிவாக்கம் செய்ய மிகப் பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு விரிவாக்கத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருத்திய வரைவு இந்திய துறைமுகச் சட்டம் 2021 மாநில அரசின் குறிப்பு வேண்டி 14.06.2021 அன்று பெறப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் மிகக்குறைவான நேரமே இருப்பதால் இந்திய துறைமுகச் சட்ட வரைவு 2021 நீண்ட கால கொள்கை முடிவுகளை உள்ளடக்கிய மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும் என தெரிவித்து மாநில அரசின் கவனத்திற்குரிய பகுதிகளை சுட்டிக் காட்டினார்.

1908ம் ஆண்டின் இந்திய துறைமுகங்கள் சட்டப்படி, துறைமுகங்கள் திட்டமிடுதல், மேம்படுத்துதல் வரையரையப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது. எனினும், இந்த வரைவு மேற்கண்ட அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து பறித்திட கூடியதாக உள்ளது என்றும், கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம் தற்போது ஆலோசனை அமைப்பாக உள்ளது. இவ்வரைவின் விதிகளின்படி இக்குழுமம் சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாக செயல்பட உள்ளது. மேலும், இக்குழுமத்தின் கட்டமைப்பு மத்திய அரசின் அதிகாரிகளை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.

விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரங்கள் தற்போது மாநில அரசிடம் உள்ளது. இவ்வரைவின்படி பல அம்சங்களில் விதிகளை உருவாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் செல்ல உள்ளது. இதன் மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன என குறிப்பிட்டார்.

மாநில கடல்சார் வாரியத்தின் ஆணைகள் மீதான மேல்முறையீடு தொடர்பான அதிகாரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது. ஆயினும், இவ்வரைவின்படி பெருந்துறைமுகங்களுக்காக ஒன்றிய அரசால் உருவாக்கப்பட உள்ள மேல்முறையீட்டு தீர்பாணையத்திடம் இவ்வதிகாரங்கள் செல்லக்கூடிய நிலை உள்ளது என்றும் இவ்வரைவில் மாநில அரசின் கவனத்திற்குரிய மேல் சில பகுதிகளின் மீது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாநில அரசின் குறிப்புரைகள் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

1908ம் ஆண்டின் இந்திய துறைமுகள் சட்ட கூறுகளின்படி, நாட்டில் உள்ள சிறு துறைமுகங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இப்புதிய வரைவால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் மொத்தமாக நீர்த்து போகக்கூடியதாக உள்ளது. மாநில அரசின் கருத்துக்களின் அடிப்படையில் சிறு துறைமுகங்கள் மீது மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்து போக செய்யக்கூடியதாக மாற்றும் முயற்சிக்கும் கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமத்தை ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றுவதற்கும் தமிழக அரசின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com