சென்னை: தமிழகத்தில் கையிருப்பில் உள்ள கரோனா தடுப்பூசிகள் இன்று பிற்பகலுக்குள் தீர்ந்துவிடும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் வெறும் 2 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. கையிருப்பு இல்லாததால், சென்னையில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அவர்களுக்கு செலுத்த தடுப்பூசி இல்லையே என்பது வருத்தமாக உள்ளது. சென்னையிலேயே சேப்பாக்கம் தொகுதியில் தான் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி கையிருப்பில் குறைவாக இருப்பதால் சென்னையில் 45 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 19 கமுகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
சென்னையில் வெறும் 5000 கரோனா தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.