
புதுச்சேரியில் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை என தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், புதுச்சேரி ரயில்வே நிலையத்திற்குச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரயில்வே மேலாளர் பாலகிருஷ்ணனிடம், தற்போதைய ரயில் சேவை, புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மக்கள் அதிகம் பயன்பெறக்கூடிய புதுச்சேரி-விழுப்புரம் இடையிலான பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்கச் செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு, சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்து உடனே அதனை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.