
பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுத் தாக்கல்
திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளராக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதிமுக- பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை முற்பகல் வரை வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பாஜகவின் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜக வேட்பாளராக என்னைத் தேர்வு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகும். நல்ல நேரத்தைக் காரணம் கருதி வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன். திருநெல்வேலி தொகுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறேன். ஜவுளி பூங்கா உள்பட இத்தொகுதிக்கு தேவை உள்ள அனைத்து திட்டங்களையும் வெற்றி பெற்றால் செய்து முடிக்க அயராது உழைப்பேன். இத் தொகுதியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர்.
வேட்புமனு தாக்கலின் போது அவரது இளைய மகன் விஜய் உடன் இருந்தார். பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.