திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 3 வாக்குறுதிகளில் மாற்றங்கள் செய்து புதிதாக வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 13) வெளியிட்டார்.
இதில் மூன்று வாக்குறுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதில், வாக்குறுதி 43-ல், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது.
வாக்குறுதி 367-ல், காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதி அளிக்கப்படாது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை உறுதியாக நிராகரிக்கப்படும்.
வாக்குறுதி 500-ல், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்."
ஆகிய மூன்று வாக்குறுதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐப் பொறுத்தவரை, தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு திமுக அழுத்தமாக குரல் கொடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.