தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொண்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாகவும், மறைந்த தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் மக்களிடையே பேசி வருவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
அதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஆறுமுகசாமி ஆணையத்தை விமர்சித்தார்.
எனவே, இருவர் மீதும் தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.