நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
பொத்தனூர் மதுரைவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர் அப்பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஆறுமுகம் என்பவர் மூலம் வீட்டைச் சீரமைத்துள்ளார். வீட்டைச் சீரமைக்கும் போது கட்டட தொழிலாளர்கள் அஞ்சலையம்மாள், மாதோஸ்வரன், பழனியப்பன், குணசேகரன், கோவிந்தம்மாள் மற்றும் பாரதி ஆகியோர் கட்டட சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் கட்டட தொழிலாளி மாதேஷ்வரன் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாயினர்.
படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய பழனியப்பன், குணசேகரன், கோவிந்தம்மாள் ஆகிய மூவரையும் அருகிலிருந்தவர்கள் காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அங்கு வேலைபார்த்து வந்த பாரதி உயிர் தப்பினார்.
கட்டடம் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்ததும், மூவர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.