சென்னை: மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க ஒத்துழைப்புத் தேவை என்று எடப்பாடி கே. பழனிசாமிக்கு, மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக, நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து பழனிசாமி வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில், மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்! என்று பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்வராகவிருக்கும் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையையும், ஒத்துழைப்பையும் கேட்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்துள்ளது.