நாகை பெட்ரோகெமிக்கல் மண்டல அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்

நாகை பெட்ரோகெமிக்கல் மண்டலம் அறிவிப்பாணையை திரும்ப பெறக் கோரி நவம்பர் 16-இல் நாகையில்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். 
நாகை பெட்ரோகெமிக்கல் மண்டல அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்
நாகை பெட்ரோகெமிக்கல் மண்டல அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்

நாகப்பட்டினம்:  நாகை பெட்ரோகெமிக்கல் மண்டலம் அறிவிப்பாணையை திரும்ப பெறக் கோரி நவம்பர் 16-இல் நாகையில்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நாகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன் திட்டத்திற்கு 2011 ஆம் ஆண்டு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி லிமிடெட் என்கிற தனியார் நிறுவனத்துடன்  அப்போதைய துணை முதல்வரும்,   தற்போதைய முதல்வருமான மு. க. ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

இத்திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் அதனை எதிர்த்து 10 ஆண்டுகாலம் விவசாயிகள் பொதுமக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது,   ஆய்வுக்குத்தான் கையொப்பமிட்டோம். தற்போது பேரழிவு என்பதால் திமுகவும் இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறி   இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

10 ஆண்டுகாலம் தொடர் போராட்டத்தால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு, கச்சா எடுக்கிற பணிகளிலிருந்து ஓஎன்ஜிசி உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களை வெளியேற்றி விட்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த 2020- ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால்,  விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில்,  நாகப்பட்டினம் அருகே இருக்கிற நரிமணம்  சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் முட்டம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம், நரிமணம், பனங்குடி ஆகிய கிராமங்களில் விளை நிலங்களை விவசாயிகள் ஒப்புதலின்றி,  அச்சுறுத்தி கையகப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். 

தற்போது திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பகுதியான கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டு டெண்டர் கோரியுள்ளதை  கண்டிக்கிறோம்.

இவ்வறிவிப்பால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள்,  விளை நிலங்களை இழந்து வாழ்வாதாரத்தை கைவிட்டு அகதிகளாக வெளியேறி வெளியூர்களில் தஞ்சமடையும் பேராபத்து ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு பெட்ரோல் கெமிக்கல் மண்டல அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற நவம்பர் 16-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 

பொதுமக்கள் மத்தியில் பாதிப்பு குறித்து எடுத்துரைப்பதற்காக நவம்பர் 13ம் தேதி சம்பந்தப்பட்ட கிராமங்களில் மக்கள் சந்திப்பு பிரசார பயணங்களை மேற்கொள்ள இருக்கிறோம். 

விவசாயிகள் திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர். அதற்கான நம்பிக்கையோடு செயல்பட தமிழக அரசு முன்வர வேண்டும். 

10 ஆண்டுகாலம் திமுகவும் எங்களோடு இணைந்து போராடி உரிமைகளை மீட்டு எடுத்திருக்கிறோம். இந்நிலையில் மீண்டும் பெட்ரோகெமிக்கல் மண்டலம் என்ற பெயரில் விவசாயிகளை புதைக்குழிக்குத்  தள்ளுவதை விவசாயிகள் அனுமதிக்கமாட்டோம். 

இதனை அனுமதிப்பது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை  வரையிலும் பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு இணையாகும்.  எனவே இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com