ஸ்ரீபெரும்புதூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால் உபரி நீர் வெளியேறும் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உள்பட்ட செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25. 51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரம் 24 அடி ஆகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஏரியில் நீர் இருப்பு 21.30 அடியாகவும் ஏரியின் கொள்ளளவு 2934 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 600 கனஅடி ஆக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் விரைவில் 22 அடி எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுவதால் ஏரியின் வெள்ள உபரி நீரை வெளியேற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி ஏரிக்கு வரும் உபரி நீரை ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க | வேலைவாய்ப்பு உருவாக்கமும் இழப்பும்...
மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, மற்றும் அடையாறு ஆற்றில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.