அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவின், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று (திங்கள்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, பணியாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.