சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை - முழு விவரம்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை - முழு விவரம்
சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை - முழு விவரம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை அதிகாலை நெருங்கும்.

அதனை தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரம், வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக் கூடும்.

இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக் கூடும்.

இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுவை, ராணிப்பேட்டையின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிககனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும்  பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கோவை, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்ட், திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும்.

நவ. 11ல்,சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் வடிய கன முதல் மிக கனமழை, ஓரிரு இடடங்களில் அதிக கனமழையும் பெய்யக் கூடும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

புதுச்சேரி, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை..
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com