சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அரசு கட்டுப்பாட்டு மையத்துக்கு இன்று நேரில் சென்று, அதன் செயல்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அப்போது, பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி வாயிலாக நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். ஒரு பெண் தனது வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். பிறகு, அப்பகுதியில் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டார்.
சனிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.