சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட அனைத்துவிதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்க காலத்தின் போது, பயணிகளின் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதையும் படிக்கலாமே.. 3வது அலை அச்சம்: பெங்களூருவில் சப்தமில்லாமல் நடக்கும் விஷயம்
ஆனால், தற்போது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாக, சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நவம்பர் 15-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை அனைத்துப் பயணிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் இனி, திரும்ப வருவதற்கும் சேர்த்து (ரிட்டர்ன் டிக்கெட்) டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கான மாத பயண அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம். யுடிஎஸ் செயலிலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.