திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மர்மமான முறையில் முழங்காலிட்டப்படி தலைகுப்புற உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக கிராமிய காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் ஏரிகள் மற்றும் நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இதனால் புது நீர் வரத்தால் மீன்கள் வரத்தும் அதிகம் உள்ளதால் கிராமங்களைச் சேர்ந்தோர் வலைவீசி மீன்பிடித்தும் வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் அருகே பட்டரைபெருமந்தூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த கட்டி என்கிற சண்முகம்(55). இவர் ஏரிக்குள் படகில் சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர் வழக்கம் போல் சனிக்கிழமை காலையில் சுங்கச்சாவடி அருகே பூண்டி ஏரியில் படகில் மீன் பிடிக்கச் சென்றாராம். அப்போது, மற்றொரு மீனவர் சென்று பார்த்த போது ஏரியோரம் முழங்காலிட்டப்படி தலைகுப்புற கவிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மீனவர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் விரைந்து பார்த்த போது அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உடனே திருவள்ளூர் கிராமிய காவல்நிலைய காவலர்களுக்கு தகவல் அளித்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்தனர். அதையடுத்து மீனவரின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து மீனவர் மர்மமான முறையில் முழங்காலிட்டபடி தலைகுப்புற முகம் புதைத்தபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.