சென்னை: திரைப்படத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்களை, கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் வெளியானது. இது குறித்து பல தரப்பினரிடையே விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியானது. மாநாடு திரைப்படம் வன்முறையை தூண்டும் படமாக உள்ளது. அதனை தடை செய்ய வேண்டும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகள் திரைத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்கள், கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திரைப்படத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்கள், கருத்துக்கள் தெரிவிப்பதை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கூறும் கருத்து நம் கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எதற்காக பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம். அதேநேரத்தில் வரலாற்று படங்களில் உண்மைக்கு புறம்பான கருத்து வந்தால் மக்களுக்கு எடுத்துரைப்பதில் தவறில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.