
உப்பாறு அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர்.
திருப்பூர்: தற்போது திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் உப்பாறு அணை நிரம்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட உப்பாறு அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 24 அடியாகும். இந்த உப்பாறு அணை கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்த நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதையும் படிக்க | 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் செயல்படும் அரசு தமிழ்ப்பள்ளி: தமிழர்கள் அதிர்ச்சி
தற்போது பருவமழை தீவிரமடைந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரின்றி காய்ந்து கிடந்த உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் மற்றும் திருமூர்த்தி அணையின் உபரி நீர் உப்பாறு அணையை வந்தடைந்தது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுளுக்கு பின் உப்பாறு சனிக்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டியது.
உப்பாறு அணையை ஆர்வமுடன் பார்வையிடும் குண்டடம், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள்.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் சனிக்கிழமை இரவு10:30 மணி அளவில் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக உப்பாறு அணையின் கரையோரப் பகுதிகளான ஆலாம்பாளையம் தொப்பம்பட்டி சின்னிய கவுண்டம்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உப்பாறு அணை நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வாழப்பாடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் பேரணி
மேலும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய உப்பாறு அணை குண்டடம், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.
அதேபோல உப்பாறு அணையைச் சுற்றியுள்ள விவசாயிகளும் அணை நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.