துறையூர்: துறையூர் அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு(37). இவருக்கு சொந்தமாக சுமை ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவருடைய முதல் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து அதே ஊரில் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள உறவுக்கார பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
சனிக்கிழமை இரவு பிரபுவுக்கு செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பை தொடர்ந்து அவர் வீட்டை விட்டு சென்றாராம். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை.
இந்த நிலையில் கூர்மையான ஆயுதம் கொண்டு கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தப்பட்ட காயங்களுடன் பிரபு சடலமாக கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பகுதியில் தகவல் பரவியது.
இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தகவலறிந்து திருச்சி எஸ்பி சுஜித்குமார் நேரில் சென்று விசாரித்தார்.