சென்னை: அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்குத் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் வெளியிட்ட மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.
ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள்.
அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திமுகவிற்கும் மக்களால் அமையபெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.