சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்படக் காரணமாக அமைந்தது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட பெரும்நீர்தான்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும் மழை பெய்தாலும் சாலைகளில் நீர் தேங்காத வகையிலும், ஏரி மற்றும் குளங்களில் மழை நீர் சென்றடையும் வகையிலும் முன்னேற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இதன்ஒருடிபயாக, செம்பரம்பாக்கம் ஏரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
குன்றத்தூர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு, ஏரியின் நீர்மட்ட நிலவரம் குறித்த விவரங்களை அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், இது மொத்த கொள்ளளவில் 77 சதவீதம் என்றும் தெரிவித்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது, ஏரியில் நீர் திறப்பது பற்றி பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், ஏரியின் நீர்மட்ட நிலவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.