சேலம்: போக்குவரத்து துறையில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் உதவியாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் அரசுப் போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதையும் படிக்கலாமே.. இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சேலம் உதவியாளருமான மணியை சந்தித்தார். தமிழ்செல்வனுக்கு, உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகவும் இதற்கு ரூ.17 லட்சம் ரூபாய் தரவேண்டும் என மணி கூறியதாகத் தெரிகிறது. தமிழ்செல்வனும், உதவியாளர் மணி கேட்டவாறு ரூ.17 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.
ஆனால் சொன்னபடி, உதவி பொறியாளர் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தமிழ்ச்செல்வன் மணியிடம் சென்று தான் கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் மணி, பணத்தை திருப்பி தராததோடு தமிழ்ச்செல்வனை மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீ.அபினவ்வை நேரில் சந்தித்து, புகார் மனு கொடுத்தார். இதையடுத்து ரூ.17 லட்சம் மோசடி குறித்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவிற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் காவலர்கள் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மணியின் மீது மோசடி மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.