வடகிழக்குப் பருவமழை: வேளாண்மைத் துறை செய்ய வேண்டியது என்ன?

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் வேளாண்மைத்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
வடகிழக்குப் பருவமழை: வேளாண்மைத் துறை செய்ய வேண்டியது என்ன?
வடகிழக்குப் பருவமழை: வேளாண்மைத் துறை செய்ய வேண்டியது என்ன?

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் வேளாண்மைத்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 27ஆம் தேதி நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்..

வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 26.10.2021 அன்று தமிழக முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கியதைத் தொடர்ந்து, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் 27.10.2021 அன்று வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைகளைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்கள் மாவட்ட அளவில் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக காணொலி வாயிலாக ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவ மழை இயல்பாக அக்டோபர் இறுதி வாரத்தில் துவங்கி டிசம்பர் வரை ஆக மொத்தம் 65 நாட்களில் 448 மிமீ மழை பெய்யும். குறைந்த நாட்களில் அதிக மழை என்பதுடன், அதிக வேகத்துடன் கூடிய புயல் காற்றும் வீசும் என்பதாலும், அதனால் பயிர்களுக்கு பலத்த சேதம் உண்டாகும் என்பதால், வேளாண் பணிகள் பாதிக்காமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்ட அலுவலர்களையும் ஆய்வு செய்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். 
அதன் விவரம் பின்வருமாறு.

1. கடந்த தென் மேற்குப் பருவத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதுமான மழை பெய்ததால், மாநிலத்தில் உள்ள நீர்த் தேக்கங்கள் மற்றும் பாசன ஏரிகளில் உள்ள நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. நீர் வரத்து மற்றும் நீர் இருப்பு குறித்த விபரங்களை தினமும் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

2. நடப்பு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் மொத்தம் 14 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25.10.2021 முடிய 7.8 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுதானியங்கள், பயறு வகைகள், கரும்பு, பருத்தி, எண்ணெய்வித்துக்கள் போன்ற பயிர்களையும் சேர்த்து, அனைத்து வேளாண் பயிர்களில் 46.2 இலட்சம் எக்டர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 24.41 இலட்சம் எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

3. சம்பாப் பருவத்தில் ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 49, கோ 43, கோ 52, திருச்சி3, வெள்ளைப் பொன்னி, டிகேஎம்13, விஜிடி1, என்எல்ஆர்34449, ஆர்என்ஆர்15048 போன்ற மத்திய கால இரகங்களை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

4. விவசாயிகளுக்கு போதுமான அளவு தரமான விதைகளை வட்டார வாரியாக அரசு விரிவாக்க மையங்களிலும், தனியார் கடைகளிலும் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5. பாசன நீரை மிச்சப்படுத்த நேரடி நெல் விதைப்பு முறையினை பிரபலப்படுத்துவதற்கு வேளாண் விரிவாக்க அலுவலர்கள் கிராம அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.

6. இரசாயன உரங்களின் தேவை நடப்பாண்டில் அதிகரித்துள்ளதால் தமிழகத்திற்கு தேவையான அளவு உரங்களை வழங்க வேண்டும் என்று  தமிழக முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசின் இரசாயன உரத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடந்த 22.10.2021 அன்று கடிதம் எழுதினார்கள். அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை கூடுதலாக ஒதுக்கியுள்ளது. இக்கூடுதல் ஒதுக்கீட்டின்படி, நமக்கு தேவையான உரங்களை சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

7. காக்கிநாடா துறைமுகத்திற்கு 45,000 மெ.டன் டிஏபி உரத்தை இப்கோ நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

8. துறை அலுவலர்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தனியார் கடைகளில் ஆய்வு செய்து, இரசாயன உரங்கள் குறிப்பாக யூரியா, டிஏபி போன்றவை தேவைக்கேற்ப இருப்பு உள்ளதை தினமும் கண்காணிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் ஏதும் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று அரசு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. வடகிழக்குப்பருவத்தில் பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் ஏற்படும் என்பதால், ஒவ்வொரு கிராமத்திலும், பூச்சி நோய் கண்காணிப்புத்திடல் அமைத்து, கூர்மையாக ஆய்விட்டு, அனைத்து ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

10. அனைத்து விவசாயிகளும் உரிய காலக்கெடுவுக்குள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பதிவு செய்வதற்கு விரிவாக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. பயிரின் வளர்ச்சிக்கேற்ப பாசன நீர் தேவை எங்கு அதிகம் உள்ளது என்பதை கிராம அளவில் ஆய்வு செய்து, அதற்கேற்ப வாய்க்கால்களில் பாசன நீரை வழங்கிட பொதுப்பணித்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

12. தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வெள்ளம், புயல் ஏற்படும் நாட்களில் உடனடியாக வடிகால் வசதியினை உருவாக்கி நெல் வயல்களில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை வடிகட்டுவதற்கு விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

13. தோட்டக்கலை மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்க்கலாம். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்கலாம். மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். மேலும், இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம்.

14. பசுமைக்குடிலின் உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பட்டுப்போன, காய்ந்துபோன மரங்கள் மற்றும் கிளைகள் பசுமைக்குடிலினை பாதிக்கா வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும். கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரிசெய்தல் வேண்டும்.

15. மா, கொய்யா, மாது/ளை மரங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். பூஞ்சாண நோய்களைத் தடுக்க நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். வாழை மரங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடிவைத்தல் வேண்டும்.

16. வடகிழக்கு பருவ மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏதேனும் கட்டடங்கள், வீடுகள் இடிந்து மற்றும் புயலினால் மரங்கள் முறிந்து இடர்பாடுகள் ஏற்படின் அவற்றினை அப்புறப்படுத்துவதற்கு ஜேசிபி போன்ற மண் அள்ளும் இயந்திரங்கள், மண் தள்ளும் இயந்திரங்களும் வேரோடு சாய்ந்த முறிந்த மரங்களை அறுத்து அப்புறப்படுத்திட 805 கனரக மரம் அறுக்கும் கருவிகளும், பெருமழையினால் வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து நீரினை இறைத்து வெளியேற்றுவதற்கு டிராக்டருடன் இயங்கக்கூடிய 20 நீர் இறைக்கும் பம்புகளும், சாலைகளில் முறிந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றிடுவதற்கு 60 ஜேசிபி இயந்திரங்களும், 29 டிராக்டருடன் கூடிய டிப்பிங் டிரைலர்களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

17. சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளில் உள்ள சோலார் பேனல்களை புயலினால் ஏற்படும் தருணங்களில் சூறாவளிக் காற்றிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சோலார் பேனல்களை முழுவதுமாக கழற்றி பாதுகாப்பாக வைத்திடுமாறு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

18. வேளாண் விற்பனைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் உள்ள கிடங்குகள் நன்கு சுத்தமாக, மழை நீர் தேங்காமல் இருக்கும் படி உறுதி செய்ய வேண்டும்.

19. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், உழவர் சந்தைகளுக்கான அணுகுசாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றமாதிரி அமைய வேண்டும். 20. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் திறந்த வெளியில் விளைபொருட்கள் விற்க நேர்ந்தால், மழைக் காலங்களில் தார்ப் பாய்கள் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான தார்ப்பாய்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நடப்பாண்டில் அனைத்து நீர்நிலைகளிலும் போதுமான நீர் உள்ளதால், விரிவாக்கப்பணியாளர்கள் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து உயர் விளைச்சலுக்கு உதவுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com