சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.900.50 என உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் இருமுறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுகளில் சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.285 வரை உயர்த்தப்பட்ட விலையால் தினக்கூலி பெறுவோரும், மாத ஊதியப் பிரிவினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இங்கு தொடர்ந்து விலைகளை உயர்த்தி வருவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித் தரும் செயலாகும்.
கரோனா நோய் தொற்றுப் பரவல் நெருக்கடியால் வேலை மற்றும் வருமான இழப்புக்கு ஆளாகி நிற்கும் குடிமக்களுக்கு ரொக்கப்பணம் கொடுத்து உதவ வேண்டிய ஒன்றிய அரசு, எரிபொருள் விலை உயர்வு தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது. சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.