கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு கரோனா தொற்று எதிர்ப்புக்கான தடுப்பூசி போடப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், மனோலயம் தொண்டு நிறுவனமும் இணைந்து, குடிதாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப்பள்ளியில், மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் மகேஸ்வரி முருகையன் முன்னிலை வகித்தார். முதன்மை பயிற்சியாளர் அனுராதா வரவேற்றார். பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிரண், சுகாதார ஆய்வாளர் சண்முகராஜ், சுகாதாரப் பணியாளர் எழிலரசன், செவிலியர் செல்வி உள்ளிட்டோர், 46 மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு, இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தினர். ஏற்பாடுகளை, பயிற்சியாளர் செளமியா, மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கவனித்தனர்.