சென்னை: பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சந்தித்துப் பேசுகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து, பிரியாவிடை கொடுக்கும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த சந்திப்பு அமைந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்துக்கு புதிய ஆளுநராக 1976-கேரள பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநருமான ரவீந்திர நாராயண ரவியை (69) குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமித்தார்.
தற்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
எனவே, பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பொறுப்பேற்க உள்ளார். அதற்காக அவர் நாளை காலை 8.30 மணிக்கு தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிறார். இன்று தமிழக ஆளுநராக அவரது கடைசி பணிநாள் என்பதால், மரியாதை நிமித்தமாக ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து பிரியாவிடை கொடுக்கிறார்.
2012-இல் மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக ரவீந்திர நாராயண ரவி ஓய்வு பெற்றாா். அதன்பின்னா் 2019-இல் நாகாலாந்து ஆளுநராக பொறுப்பேற்றாா் .
நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவாா்த்தையில் அவா் முக்கியப் பங்கு வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.