பொதுமக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார் அளிக்க மாநில தேர்தல் ஆணையம் எண்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு புகார் மையம் அமைத்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதில், 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய கட்டணமில்லா எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இன்று (செப்.15) வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.