சென்னை: முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது.
பெங்களூருவிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல், திருவண்ணாமலையின் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, வீரமணியின் உதவியாளரும் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான சியாம்குமாரின் அரக்கோணம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது. ஆய்வாளர் வில்வநாதன் தலைமையில் ஆறு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். வீட்டின் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சரின் திருமண மண்டபத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கே.சி. வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க| தொலைத்தொடர்புதுறையில் 100 % அந்நிய நேரடி முதலீடு