தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயா்த்த தற்போது வாய்ப்பில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தும் பணி சோதனை அடிப்படையில் சில பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் 2,000 பேருந்துகளில் பயணிகளின் முகங்களை அறியும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகளை வாங்குவது குறித்து ஜொ்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில் புதிய பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயா்த்த தற்போது வாய்ப்பில்லை.
தமிழகத்தில் மின்வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்வாகன வழிகாட்டு நெறிமுறைகள்-அரசு ஆலோசனை: மின்வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுவருவதற்கு, தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
பேருந்துப் பயணத்தில் ஏற்படும் இடா்பாடுகள் உள்ளிட்ட காரணங்களை புகாராக தெரிவிப்பதற்காக, துறைக்கு என கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பட்டன்கள் ஆகிய அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.