சமயபுரம் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும், பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் சமயபுரம் கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவிலில் பக்தர்களுக்காக சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் மாசி கடைசி ஞாயிறு, பங்குனி கடைசி ஞாயிறு வரை விரதம் மேற்கொள்வது தனிச் சிறப்பாகும்.
இதையும் படிக்க | பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி
சிறப்பு மிக சித்திரைப் பெருவிழா இன்று ஏப்.10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிப் பட்டம் சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. உற்சவ அம்பாள் கேடயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரம் அருகில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், மஞ்சள், திரவியப் பொடி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி பக்தி முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் திருக்கோவில் இணை ஆணையர் சி. கல்யாணி மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.