புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடிய நீரவ் மோடி வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டள்ளது.
நீரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளி பாரப் சுபாஷ் ஷங்கரை எகிப்தின் கெய்ரோ நகரிலிருந்து சிபிஐ அதிகாரிகள் இன்று காலை மும்பை அழைத்து வந்தனர்.
சுபாஷ் ஷங்கர் கெய்ரோவில் இருப்பது தெரிய வந்ததையடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை
நீரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டவர் சுபாஷ் ஷங்கர் என்பதும், அவரது ஒரு நிறுவனத்தில் சுபாஷ் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றியதும், இந்த விசாரணையில் சுபாஷ் ஷங்கரிடமிருந்து மேலதிகத் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார் நீரவ் மோடி. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் தொடா் முயற்சியால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.