ஆற்காடு தனியார் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சாலையில் மூன்று அடுக்கு மாடியில் தனியார் ஜவுளிக் கடை ஒன்று உள்ளது. கடையை வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பூட்டிவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் பூட்டி விட்டுச்சென்ற சிறிது நேரத்தில் கடையின் கீழ்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீயை அணைத்தனர்.
மூன்று மாடிகளுக்கும் பரவிய தீயால், கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள் உள்பட ஏராளமான பொருள்கள் எரிந்து நாசமாகின. சுமார் 7 மணி நேரம் போராடி அதிகாலையில் தீ அணைக்கப்பட்டது.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆற்காடு போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.