எடப்பாடி: பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதியில், பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்த மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு செயல் விளக்க பயிற்சி முகாம் பூலாம்பட்டியில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசனப் பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக அளவிலான நிலப்பரப்பில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்வெளிகளில், இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மெழுகு வண்டுகள் ஆக்கிரமித்து மரவள்ளி பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த இயலாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திடும் முறை குறித்து விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளித்த வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.
சேலம் மாவட்டம், சந்தியூர் பகுதியில் இயங்கிவரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட காவிரி வடிநில பகுதியில் உள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்களில் முகாமிட்டு இரவு நேரங்களில் படையெடுத்து வரும் மெழுகு வண்டுகளை பெரிய அளவிலான மின் விளக்குகள் அமைத்தும், இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மின் விளக்கு பொறி உள்ளிட்ட பல்வேறு வகையான சாதனங்கள் வாயிலாக மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திடும் முறை குறித்து விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளித்தனர்.
முகாமில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ரவி, கிருஷ்ணவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அனுஷா, வேளாண் உதவி இயக்குநர் சுமதி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
பெரிய அளவிலான மின் விளக்குகள் அமைத்து மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளிக்கும் வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.
பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் தொடர்ந்து 10 நாள்களுக்கு இம்முறையில் மெழுகு வண்டுகளின் தாக்குதலை கட்டுப்படுத்திடுமாறு அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.