தஞ்சாவூர்: கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் செயல்படுவது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குழி மாத்தூர் கிராமத்தில் கோணக்கடுங்கலாறில் தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
கரோனா பரவல் பொருத்தவரை ஊரடங்கு, பள்ளிகள் திறப்பது, திறக்கக்கூடாது போன்றவை குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வது வழக்கம்.
தூர் வாரும் பணியில் ஜேசிபி இயந்திரங்கள்
மருத்துவ வல்லுநர்கள் குழு அளிக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்லாமல் மற்ற துறைகளும் முடிவு செய்யும். தமிழக முதல்வரின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 21.03 கோடி மதிப்பில் 1,356.44 கி.மீ. தொலைவுக்கு 170 இடங்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறினார்.
இதையும் படிக்க | மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளா?: முதல்வர் நாளை ஆலோசனை