சென்னை: பிரசவத்தின்போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
12 ஆண்டுகள் அவதிப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரம் காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி குபேந்திரி (23). இவர், 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். பின், அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர், தன் கவனக்குறைவால், கத்தரிக்கோலை வயிற்றில் உள்ளே வைத்து தைத்து விட்டார்.
இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பின், குபேந்திரிக்கு தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வாயிலாக குபேந்திரியின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டது.
குபேந்திரியின் கணவர் பாலாஜி, இச்சம்பவம் குறித்து, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம் குபேந்திரிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.