/

இன்று 50 ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) நடைபெறுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:33 pm

DIN

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்காக கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 32 முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், 33-ஆவது கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் சுமாா் 4 கோடி போ் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனா். மத்திய அரசு அறிவித்த 75 நாள்கள் முடிந்துவிட்டால், பூஸ்டா் தவணை தடுப்பூசியை தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் அளித்துதான் செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பூஸ்டா் தவணை தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் முதல், இரண்டாவது தவணை தவணை தடுப்பூசியும் செலுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.