மின்சார சட்டத்திருத்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்களவையில் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று மசோதா தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை வைத்ததை அடுத்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது.
மின்சார சட்டத் திருத்த மசோதாவில், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும், மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்றவை முக்கிய அம்சமாக உள்ளன.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.
1. தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் முதல் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படலாம்.
2. மின் கட்டணத்தை மத்திய ஒழுங்குமுறை ஆணையமே இனி நிர்ணயம் செய்யும் என்பதால், தமிழகத்தில் மின்கட்டண உயர்வு ஏற்படலாம்.
3. மின் விநியோகம் தனியாரிடம் தரப்படும்.
4. தனியாருக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டால், மின்வாரியத்தில் வேலையிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
5. விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படலாம் .
6. மாநிலத்தின் மின் உற்பத்தியை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம்.