கீழ்பவானி பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு: அமைச்சர் எஸ். முத்துசாமி தகவல்

கீழ்பவானி பாசனத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 8 மணிக்கு கீழ் பவானி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தைதொடங்கி வைத்த வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி.
ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தைதொடங்கி வைத்த வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி.


ஈரோடு: கீழ்பவானி பாசனத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 8 மணிக்கு கீழ் பவானி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

முன்னதாக, இது குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர் பின்னர் அமைச்சர் கூறியதாவது: போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு பிரசாரம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் வரும் 19 ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுகிறது. சுமார் 240 அரசுப் பள்ளியைச் சேர்ந்த 60 ஆயிரம் மாணவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள். கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி போன்றவைகள்  நடைபெறுகின்றன. இதைத் தவிர தனியார் பள்ளிகளும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும். போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மாவட்ட எல்லைகள் டோல்கேட் பேருந்து  ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். 

இதுவரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் மறுவாழ்வு ஏற்படுத்தப்படும். மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை. அரசுப் பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் இருந்தால் அவைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் வரும் 25, 26 தேதிகளில் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். சுமார் 85 திட்டங்கள் இதுவரை பரிசீலிக்கப்பட்டு அவரால் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும். ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 

கீழ்பவானி அணை நிரம்பி வழிகிறது. எனவே, புதன்கிழமை கீழ்பவானி கால்வாய் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. எனினும், அதிகாரபூர்வமாக கீழ்பவானி பாசன பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அணையிலிருந்து கால்வாயில் வழக்கம்போல் தண்ணீர் திறந்து விடப்படும் என அமைச்சர்  முத்துசாமி  கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாநகர மேயர் நாகரத்தினம், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ திருமகன் ஈவெரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com