நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நகர செயலாளருமான கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டு வரும் சோதனைக்கு அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் அவர்கள் வீட்டிலும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!
நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நகர செயலாளருமான கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தினர்.
கடந்த 2011 முதல் 2016 வரையில், 2016 முதல் 2021 வரையிலும் நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி பாஸ்கர். இவர் பத்தாண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மீது புகார் எழுந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர்
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற நிலையில் பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாஸ்கரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக முன்னாள் பேரவை உறுப்பினர் ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடங்கி இருக்கிறது.
வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் வழக்குப் பதிந்து சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.